மும்பை: மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 30 வயதுள்ள இளம்பெண் ஒருவர் அறை எடுத்து தங்கினார். கடந்த 28ம் தேதி தனது அறையில் தங்கிய அவர் வெளியில் வரவில்லை. சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அந்த இளம்பெண் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வெர்சோவா பகுதி போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையும் நடத்தி வந்தனர்.
அந்த பெண் எழுதியிருந்த கடிதத்தில், ‘என் தற்கொலைக்கு யாரும் பொறுப்புஅல்ல. இதுதொடர்பாக யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம். எனக்கு நிம்மதியில்லை. மரணத்தில் அது கிடைக்கும் என்று நம்புவதால் இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.தற்போது போலீசாரின் விசாரணையில், அவர் பெயர் அகன்ஷா மோகன் என்பதும், அவர் ஒரு மாடல் அழகி என்பதும், சமீபகாலமாக விளம்பரப் படங்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. அகன்ஷா மோகன் நடித்த ‘சியா’ என்ற படம், கடந்த மாதம் 16ம் தேதி வெளியானது.