நீட் தேர்வு குளறுபடி – மாணவிக்கு அசல் விடைத்தாளை காட்ட உத்தரவு!

நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட குறைவாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மாணவிக்கு அசல் விடைத்தாளை காண்பிக்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்மா விக்டோரியா என்கிற மாணவி தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜூலை மாதம் நடந்த நீட் தேர்வுக்கான விடைத்தாள்கள் ஜூலை 31ஆம் தேதி வெளியிடபட்டது. அதில் 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், பின்னர் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட நீட் தேர்வின் மதிப்பெண் பட்டியலில் 65மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளதால், தனது விடைகள் முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, அசல் விடைத்தாளை காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு வந்தால் விடைத்தாளை சரிபார்ப்பதற்காக காண்பிக்க தயாராக இருப்பதாக தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமையில் விடைத்தாளை காண்பிப்பதற்கான தேதியை, 10 நாட்களில் நிர்ணயித்து மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டார்.

அந்த தேதியில் நொய்டா வரும் மாணவிக்கு அசல் விடைத்தாளை காண்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.