எந்த 'ஐடியாவும்' இல்லை – 'காந்தாரா' சப்தமி கவுடா

மொழி எல்லைகளைக் கடந்து மற்றுமொரு ரூ.100 கோடி வசூல் படமாக கன்னடப் படமான 'காந்தாரா' சாதனை புரிந்து வருகிறது. 'கேஜிஎப் 1, 2' படங்களுக்குப் பிறகு கன்னட சினிமாவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ள மூன்றாவது படம் இது. இப்படத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் கன்னட நடிகை சப்தமி கவுடா நடித்துள்ளார். படத்தில் அவருடைய கதாபாத்திரமும், நடிப்பும் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக இயக்குனரும், நடிகருமான ரிஷாப் ஷெட்டிக்கு நன்றி சப்தமி கவுடா தெரிவித்துள்ளார். “இந்தப் படத்திற்காக என்னை முதலில் தொடர்பு கொண்ட போது இந்த கதாபாத்திரம் திரையில் எப்படி இருக்கும். படத்தின் பெயர் பற்றி கூட எனக்கு எந்த ஐடியாவும் இல்லாமல் இருந்தது. ஆனால், திறமை வாய்ந்த ரிஷாப் சாரும், அவருடைய குழுவினரும் இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், ஆர்வத்தையும் எனக்குள் ஏற்படுத்தினார்கள்.

முதல் முறை ஸ்கிரிப்ட்டை படித்த போது, நடிப்புப் பயிற்சியின் போதும், லீலா கதாபாத்திரம் எப்போதும் எனக்கு சிறப்பான ஒன்றாக அமையும் எனத் தோன்றியது. அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இந்த வாய்ப்பைத் தந்ததற்கும், லீலா கதாபாத்திரத்தில் நடிக்க என்னைத் தேர்வு செய்ததற்கும் மிக்க நன்றி சார். நீங்கள் எந்த அளவிற்கு கற்பனை செய்து வைத்திருந்தீர்களோ அந்த அளவிற்கு நான் லீலா கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளேன் என நம்புகிறேன். லீலாவிற்கு சிவாவாக இருந்ததற்கு நன்றி.

இன்னும் பல பிளாக் பஸ்டர் கொடுக்க வாழ்த்துகள் சார். இன்னும் மகத்தான வெற்றிகளைப் பெற இந்தப் படம் ஆரம்பமாக இருக்கட்டும்,” என தன்னுடைய டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.