தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்.. முதல்வர் ஸ்டாலின் தலையிட வேல்முருகன் கோரிக்கை!

ஆந்திர மாநிலம் திருப்பதியில், தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது, அம்மாநிலத்தவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் சட்டக் கல்லூரிகளில் படித்து வரும் தமிழக மாணவர்கள் சுமார் 50 பேர், இன்று நடைபெற்ற தேர்வை எழுதிய பிறகு, கார்களில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், ஆந்திரா – தமிழ்நாடு எல்லையில் வடமாலைப்பேட்டை என்ற இடத்தில் தேசிய சுங்கச்சாவடியில் பாஸ்டாக் மூலம் பணம் செலுத்துவதில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது. அதைத் தொடர்ந்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து மாணவர்கள் வந்த கார் ஒன்றை அடித்து நொறுக்கினர். மாணவர்களை அவர்களை தட்டிக் கேட்ட போது, அங்கு ஒன்று திரண்ட உள்ளூர் பொது மக்களும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக சேர்ந்து, மாணவர்களை தாக்கத் தொடங்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பையும் சமாதானப்படுத்தி, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில், தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது, அம்மாநிலத்தவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள வடமாலைப்பேட்டை சுங்கச் சாவடியில் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் உள்ளூர் ரவுடிகள் ஆகியோர் இணைந்து நடத்தி இருக்கும் கொலைவெறித் தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு ஆந்திர அரசுடன் பேசி இத்தாக்குதலை நடத்தியவர்களை காணொளி காட்சிகள் வாயிலாக அடையாளம் கண்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.