மும்பை: மாற்றுத்திறனாளியை கிண்டல் செய்த நபருக்கு கத்திக்குத்து – ஒருவர் கைது

மும்பையில் தனது உடல் குறைபாட்டை கிண்டல் செய்த நபரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் ரிக்‌ஷா ஓட்டுநர்.
மும்பை கோரேகான் பகுதியிலுள்ள ஹனுமான் தேக்டி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு 11 மணியளவில் சைனீஸ் உணவகம் ஒன்றில் உணவு வாங்கச் சென்றுள்ளார் ரிக்‌ஷா ஓட்டுநர் தேஜ் பகதூர் மோர்யா(45). அப்போது அங்கு அமர்ந்திருந்த முகேஷ் சஞ்சாரி(32) என்ற இளைஞர் தேஜை கிண்டல் செய்துள்ளார். அதிலும் குறிப்பாக விபத்தில் சிக்கிய தேஜிற்கு வலது காலில் உடற் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. அதை வைத்து முகேஷ் மோசமாக கிண்டல் செய்திருக்கிறார், இதில் ஆத்திரமடைந்த தேஜ், தனது பாக்கெட்டில் வைத்திருந்த நெயில் கட்டரை எடுத்து, அதில் இணைத்திருந்த கத்தியால் முகேஷை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் முகேஷின் மார்பு, வயிறு, காது மற்றும் கண்ணுக்கு மேல் என பல இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது.
image
இதில் பலத்த காயமடைந்த முகேஷை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், நள்ளிரவு 12.35 மணியளவில் உயிரிழந்தார்.  தேஜை கைதுசெய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தேஜின் மீது இதுவரை எந்தவித குற்றவழக்குகளும் இல்லை எனவும், முகேஷ் மீது போதைப்பொருள் பயன்பாடு வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்ததும், ஏற்கெனவே இருவருக்கும் முன்பகை இருந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
மேலும் குற்றவாளி பயன்படுத்திய கத்தி மற்றும் இறந்த நபரின் ரத்தக்கறை படிந்த ஆடை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வான்ராய் காவல்நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.