மொரினா: மத்தியப் பிரதேசத்தில் பயணிகள் ரயிலை சோதனை செய்து கொண்டு இருந்தபோது மற்றொரு ரயில் மோதி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் 2 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசத்தின் மொரினாவில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது சங் ரயில் நிலையம். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட குவாலியர் – ஆக்ரா பயணிகள் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர்கள் அசோக் குமார் (56), நவ்ராஜ் சிங் (40) ஆகியோர் சோதனை செய்து கொண்டு இருந்தனர். தண்டவாளத்தில் நின்று கொண்டு ரயிலில் சோதனை செய்து கொண்டு இருந்தபோது மற்றொரு தடத்தில் டெல்லியில் இருந்து துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து மோதியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகின்றது.