“நடராஜர் கோயில் எங்கள் சொத்து, உங்களுக்கு அதிகாரமில்லை!” – அறநிலையத்துறைக்கு தீட்சிதர்கள் பதில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சொத்துக்கள், நகைகள் மற்றும் கணக்குகளை ஆய்வு செய்ய தீட்சிதர்களிடம் அனுமதி கேட்டது இந்து சமய அறநிலைத்துறை. அப்போது ஆய்வு செய்ய அறநிலையத்துறைக்கு அதிகாரமில்லை என்று மறுத்த தீட்சிதர்கள், அதன்பிறகு ஒப்புக்கொண்டனர். அதனடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறையின் அதிகாரிகள் சில நாள்களுக்கு முன்பு நடராஜர் கோயிலில் உள்ள சொத்து விபரங்கள் மற்றும் நகைகளை ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக 1950-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை உள்ள சொத்துக்கள் மற்றும் ஆபரணங்களை கணக்குகளை ஆய்வு செய்வதற்காக தீட்சிதர்களுக்கு கடிதம் அனுப்பியது அறநிலையத்துறை.

அறநிலையத்துறை

ஆனால் அதற்கு அனுமதிக்க முடியாது என்று தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர். இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன், நடராஜர் கோயில் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில், “சிதம்பரம் சபாநாயகர் கோயில் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தபோது நீங்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்த கோயிலின் நிர்வாகம் செயல் அலுவலரிடம் (அரசிடம்) இருந்தபோது பெறப்பட்ட நன்கொடைகள், காணிக்கைகள் உங்களிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது. அந்த கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டபோது, அதற்கு அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லையென்று பதில் அளித்தீர்கள்.

இந்துசமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி ஆய்வு செய்ய குழுவை அனுப்பியபோது, அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லையென்று தங்களாலும், தங்கள் வழக்கறிஞராலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. சிதம்பரம் சபாநாயகர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது என்றும், அறநிலையத்துறை சட்டப் பிரிவு 107-ன்படியும், அரசியலமைப்பு சட்டத்தின்படியும் உங்கள் உரிமை பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று நீங்கள் கூறிவருகிறீர்கள். அதனால், சபாநாயகர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது என்றும், அதன் நிர்வாகத்தில் அறநிலையத்துறை தலையிடக் கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவு நகல், அறநிலையத்துறையின் விதிகள் சபாநாயகர் கோயிலுக்கு பொருந்தாது என்ற நீதிமன்ற உத்தரவின் நகல்,

சிதம்பரம் தீட்சிதர்கள்

இந்த கோயில் தீட்சிதர்களால் அவர்களின் சமுதாயத்திற்காக கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள், தீட்சிதர்களின் சொந்த நிதியில் இருந்து கோயில் பராமரிக்கப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள், தீட்சிதர்களின் சொந்த நிதியில் இருந்து தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள், பொதுமக்களிடம் நன்கொடைகள் பெற்று தினசரி பூஜைகள் நடத்தப்படுவதாக இருந்தால் அந்த வரவு செலவு கணக்குகள், கோயில் அமைந்திருக்கும் நில உரிமை குறித்த வருவாய் ஆவணங்கள், நில உரிமை இறைவன் பெயரில் இருந்தால், அந்ந நிலம் மன்னர்களால் இறைவனுக்கு வழங்கப்பட்டதா அல்லது தீட்சிதர்களால் இறைவன் பெயரில் வாங்கப்பட்டதா என்பதற்கான ஆதாரங்கள் போன்றவற்றை 15.11.2022-க்குள் அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அப்படி தவறினால் அடிப்படை ஆதாரங்களின்றி ஊடகங்களில் தங்களால் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டு வருவதாக முடிவு செய்யப்பட்டு, அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அறநிலையத்துறையின் அந்த கடிதத்திற்கு பதிலளித்திருக்கும் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதர், ”இந்திய அரசியலைமப்புச் சட்டத்தின் 25, 26 மற்றும் 29(1) விதிகளையும், இந்து அறநிலையத்துறை சட்டம் 107-வது பிரிவை  முற்றிலும் மீறி, சிதம்பரம் நடராஜர் கோயில்  நிர்வாகத்தை சட்டவிரோதமாக எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என அறநிலையத்துறை முடிவெடுத்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம்

இது இந்து சமய அறநிலைய அறக்கட்டளைச் சட்டம் 1959, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச  நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சின் உத்தரவுகளை அவமதிக்கும் வகையில் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் வழங்கிய  தீர்ப்பின்படி, இந்து அறநிலையத்துறையோ, அதன்  ஆணையரோ ஒரு சமயக் கோவிலின் கணக்குகளை கேட்க முடியாது. டிவிஷன் பெஞ்ச் தெளிவுபடுத்திய இந்த சட்ட நிலைப்பாட்டை எங்கள் பதில்களில் நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தும், அதனை ஏற்பதை  தவிர்த்துள்ளீர்கள். பொது தீட்சிதர்கள் ஒத்துழைக்கவில்லை என்று நீங்கள் மீண்டும் மீண்டும் கூறிய குற்றச்சாட்டில் எந்தத் தகுதியும் இல்லை.   

சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் குலத்துக்குச் சொந்தமான சொத்து என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.  மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு செய்த மேல்முறையீடு, இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியலைமப்பு அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது. 1953-ன் சிவில் மேல்முறையீட்டு எண் 15-ல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியலைமைப்பு பெஞ்சில்,  சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்களின் சொத்து என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.  தீட்சிதர்கள், கோயில் நிர்வாகத்தில்,  வழிபாட்டில், கடவுளுக்குச் செய்யும் சேவைகளில் பங்கேற்க உரிமை உண்டு. இது அவர்களின் பிரத்தியோக மற்றும் சிறப்புரிமையாகும். மேலும் ஸ்ரீ சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்களுக்கு சொந்தமானது என்றும், அரசியல் சாசன பிரிவு 26-ன் கீழ் பொது தீட்சிதர்கள் பாதுகாப்பு பெற்ற தனி சமய பிரிவினர் என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தேவையற்ற வகையில் கோயிலின் வரவு செலவு விபரத்தையும், உங்கள் துறைக்கு உரிமை இல்லாத தனி சமயப் பிரிவு நிர்வாகத்தில் உள்ள கோயிலில் திரும்பத் திரும்ப ஆய்வு செய்யப் போகிறோம் என்று குறிப்பிட்டு தொடர்ந்து விளக்கம் கேட்டு வருகிறீர்கள். அரசாணை 845/76-ன்படி ஸ்ரீ சபாநாயகர் கோயிலின் 3,500 ஏக்கர் நிலங்கள், அரசு தனி வட்டாட்சியர் பொறுப்பில் உள்ளது. அதற்கான வருவாய் விவரம் இதுவரை பொது தீட்சிதர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த கடிதத்திற்கு பிறகு எந்தவித பதில் கடிதமோ அல்லது எந்தவித தொடர்போ அறநிலையத்துறையுடன் எங்களுக்கு இருக்காது. தங்களது துறை மூலம் ஸ்ரீ சபாநாயகர் கோவில் நிர்வாகத்தில் சட்டவிரோதமாக எடுக்கும் நடவடிக்கை மற்றும் உத்தரவுகள் எங்களை கட்டுப்படுத்தாது என்றும் அவைகள் நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் உரிய சட்ட ஆலோசனை பெற்று நீதிமன்ற அவமதிப்பு உட்பட அனைத்து சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் மீண்டும் வேகமெடுத்திருக்கிறது சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.