செங்கல்பட்டு மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் நாசர். இவரது மகள் நிஷ்மா(15) ஊரப்பாக்கம் கங்கை நகர் பகுதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற நிஷ்மாவிற்கு சமீபத்தில் நடைபெற்ற கணித தேர்வின் மதிப்பெண் வினாத்தாளை ஆசிரியர் வழங்கி உள்ளார். இதில் மிக குறைவான மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியர், நிஷ்மாவை கண்டித்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த நிஷ்மா தற்கொலை செய்து கொள்வதற்காக பள்ளி இடைவெளி நேரத்தில் பள்ளி மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதையடுத்து படுகாயமடைந்த நிஷ்மாவை உடனடியாக பள்ளி நிர்வாகம் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், பள்ளி தலைமை ஆசிரியர், கணிதம் பாடப்பிரிவு ஆசிரியர் மற்றும் நிஷ்மாவுடன் படிக்கும் சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.