சூறைக் காற்றுடன் கனமழை ராமேஸ்வரத்தில் 10 படகுகள் சேதம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த பலத்த மழைக்கு 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்தன. ராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் கடலில் பலத்த காற்றும் வீசி வருகிறது. அது போல் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் படகு நிறுத்தும் ஜெட்டி பாலத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி பக்கப்பலகைகள் உடைந்தன. இதில் பத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் விசைப்படகுகள் சேதமடைந்தன. ஒன்றுடன் ஒன்று மோதியதில் சிக்கிக்கொண்ட விசைப்படகுகளை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காற்றில் சேதமடைந்த படகுகளை சீரமைக்க அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரியில்: புதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் தணிகைவேல் (47). இவரது மனைவி ரமணி பொற்கலைக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 20ம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது கடல் அலையின் சீற்றம் அதிகமான நிலையில் படகு நடுக்கடலில் சேதமடைந்தது. இதையடுத்து விசைப்படகை கரைக்கு ஓட்டி, டூப்ளே சிலையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதி அருகே தரைதட்டியது. 2 கிரேன்களின் உதவியுடன் விசைப்படகை மீட்கும் முயற்சி நேற்று நடந்தது. ஆனால் கிரேனும் மணலில் சிக்கியது. விசைப்படகு முற்றிலும் சேதமடைந்து மண்ணில் புதைந்து இருக்கலாம் என தெரிகிறது.

* கால்வாயில் விழுந்து புதுப்பெண் பலி
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே எஸ்.அண்டக்குடியை சேர்ந்த பாலமுருகன் மகள் சூரியபிரியதர்ஷினி(23)க்கும் கோனாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் பிரபாகருக்கும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. இருவரும் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் பார்த்திபனூர் சென்றுள்ளனர். கீழப்பெருங்கரை என்ற இடத்தில் எதிரில் வந்த வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சம் காரணமாக கண் கூசியதால் நிலை தடுமாறி இருவரும் சாலை ஓர கால்வாயில் விழுந்தனர். மழை காரணமாக சுமார் 15 அடிக்கு மேல் தண்ணீர் கிடந்துள்ளதால் சூரியபிரியதர்ஷினி மூழ்கி பலியானார். பிரபாகர் காயத்துடன் சிகிச்சை பெறுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.