சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெட்டிகளின் இணைப்பு துண்டாகி விபத்து

சென்னை:
சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இரண்டு பெட்டிகளின் இணைப்பு துண்டானதையடுத்து, ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்.

சென்னை – கோவை இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 10.10 மணிக்கு கோவைக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் திருவள்ளூர் ரயில்வே நிலையம் அருகே இரவு 11 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது, ரயிலில் உள்ள எஸ் 7 (S7) மற்றும் எஸ் 8 (S8) ஆகிய இரண்டு பெட்டிகளில் இருந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து, பயணிகள் அச்சத்தில் அலறியடித்தனர். இதை சுதாரித்து கொண்ட ரயில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இரண்டு பெட்டிகளையும் இணைக்கும் கம்பி சேதமானதால் எஸ் 7 மற்றும் எஸ் 8 ஆகிய இரண்டு பெட்டிகள் தனியாக கழண்டு வந்தது தெரியவந்தது. பின்னர் 3 மணி நேரப்போராட்டத்திற்கு பிறகு இரண்டு பெட்டிகளுக்கும் புதிய இணைப்பு கம்பிகள் மாற்றப்பட்டு ரயில் கோவையை நோக்கி புறப்பட்டு சென்றது. இதனால் 3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் பயணிகள் பரிதவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.