ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்?; தமிழக அரசியலில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதனால், தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு, பழிவாங்கும் விதமாக செயல்படுவதாக திமுக அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இந்தச் சூழலில் பல்கலைக்கழக வேந்தராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம் பற்றி பேசி வருவது தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒருப்படி மேலே போய், ‘தமிழகத்தில் ஆளுநர் என்கிற பொறுப்பை மறந்து ஆர்.எஸ்.எஸ் தொண்டராக ஆர்.என்.ரவி செயல்படுகிறார்’ என கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

அத்துடன் ஹரிஜன் என்கிற சொல்லை பயன்படுத்தி அதே திருமாவளவனிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் நன்றாகவே வாங்கிக்கட்டிக்கொண்டார். இந்த விவகாரத்தில் ‘ஹரிஜன்’ சொல்லை சாதி சான்றிதழ் மற்றும் பிற இடங்களில் பயன்படுத்தக்கூடாது என 1982ம் ஆண்டே இந்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறி ஆளுநருக்கே திருமாவளவன் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

இப்படி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்துக்கும் இடையிலான உறவில் சிறுசிறு விரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் ஆளுநரை திரும்பக்பெற கோரி திமுக சார்பில் குடியரசு தலைவர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என திமுக அறிவித்து உள்ளதால் மத்திய அரசு மற்றும் பாஜக வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்த சூடு இன்னும் ஆறாத நிலையில் உச்சநீதிமன்றம் வாயிலாக மேலும் ஒரு சிக்கலில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாட்டி இருப்பது மத்திய அரசுக்கும், பா.ஜ.க தலைமைக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட 6 பேரும், சிறையில் இருந்தபடியே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சித்து உள்ளனர்.

எனவே, பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அனைத்து அம்சங்களுமே இவர்களுக்கும் பொருந்தும் என கூறி அவர்கள் 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் ஆளுநர் அரசமைப்பு சட்டத்தின்படி, தனது பொறுப்பை உணர்ந்து ஆற்ற வேண்டிய கடமையை செய்யாமல் தட்டிக் கழித்துள்ளதாகவும், பிழையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகுவதே சரி என, திருமாவளவன் போர்க்கொடி தூக்கி உள்ளார்.

இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், ‘மனசாட்சி, மனிதாபிமானம் இல்லாதவர் ஆளுநர் ஆர்.என்.ரவி’ என வைகோ எம்.பி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது பாஜவை ஏகத்துக்கும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கு, திமுக கூட்டணிக்கட்சிகள் போர்க்கொடி என அடுத்தடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நெருக்கடி அதிகரித்து வருவதால் அதை சமாளிக்க பாஜ தலைமையிலான மத்திய அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி ஆளுநர் ஆர்.என் ரவியை நீக்கி விட்டு ஒடிசா மாநிலத்தில் கவர்னராக உள்ள கணேஷி லாலுவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்க உள்ளதாக சமூக தலைதளங்களில் தகவல் பரவி வருவதால் தமிழக அரசியலில் அனல் பறக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.