எல்லாவித கேரக்டரிலும் நடிக்க தயார்: ஆண்ட்ரியா சொல்கிறார்

ஆண்ட்ரியா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம் அனல் மேலே பனித்துளி. கெய்சர் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப்படத்தை வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். ஆதவ் கண்ணதாசன், அழகம் பெருமாள், இளவரசு, அனுபமாக குமார், லவ்லின் சந்திரசேகர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 18ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

படத்தில் நடித்திருப்பது பற்றி ஆண்ட்ரியா கூறியதாவது: இந்த படத்தில் மதி என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறேன். இது ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் கதை. கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் மதிக்கு இங்கு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அந்த கொடுமைக்கு பிறகு அவர் முடங்கினாளா? கிளர்ந்து எழுந்தாளா? என்பதுதான் படத்தின் கதை.
மக்களை மகிழ்விக்க கமர்ஷியல் படங்கள் எளிதாக எடுக்கலாம். அந்த படங்கள் வெற்றி பெறாவிட்டாலும் அதை தொடர்ந்து அதுபோன்ற படங்கள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் இதுபோன்ற படங்கள் வரவேற்பை பெறவில்லை என்றால் அடுத்த படம் உருவாகாது. அதனால் படத்தை மிகுந்த கவனத்துடன் உருவாக்கி இருக்கிறோம்.

இந்த படம் தியேட்டர் வெளியீட்டுக்காகத்தான் எடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா காலத்தில் தியேட்டர்கள் திறக்காததால் ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. அதனால் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நான் அதிகமாக மார்டன் கேரக்டர்களில்தான் நடிப்பதாக சொல்கிறார்கள். அதை நான் விரும்பி கேட்கவில்லை. நான் ஆங்கிலோ இண்டிய பெண் என்பதால் அந்த மாதிரி கேரக்டர்களுடன்தான் என்னை அணுகுகிறார்கள். ஆனால் வட சென்னை, அன்னேயும் ரசூலும், அரண்மணை மாதிரியான படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறேன். எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க தயாராகவே இருக்கிறேன். இவ்வாறு ஆண்ட்ரியா கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.