சென்னை உயர்திமன்ற நீதிபதி சுவாமிநாதன் குறித்து, அவதூறாக சமூகவலைதளத்தில் பதிவு செய்ததாக, யூட்யூபர் சவுக்கு சங்கர் மீது உயர் நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்து. யூட்யூபர் சவுக்கு சங்கர் மீதான இந்த குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கில், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி விதித்தது. மேலும் அவர் நீதிமன்றம் குறித்து பேசிய பதிவுகளை நீக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், அடுத்த விசாரணை வரை எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.