தாலிபான்கள், 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து, பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை அவ்வப்போது ஒவ்வொன்றாகக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதாவது, பெண்கள் நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு தடை விதித்ததோடு, பெரும்பாலான வேலைவாய்ப்புத் துறைகளிலும், பெண்கள் பணிபுரியத் தடை விதிக்கப்பட்டது. இன்னும், தலை முதல் கால் வரையிலும் தங்களது உடலைப் பெண்கள் மூடி மறைத்து ஆடை அணிய வேண்டும் என விதிகள் கடுமையாக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது, பெண்கள் ஜிம்கள் மற்றும் பூங்காக்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தாலிபான்களால் நியமிக்கப்பட்ட நல்லொழுக்கம் மற்றும் துணை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,“கடந்த 15 மாதங்களாகப் பெண்களுக்கான பூங்காக்கள் மற்றும் ஜிம்களை மூடுவதைத் தவிர்க்க, குழு தன்னுடைய சிறந்த முயற்சியை மேற்கொண்டது.
பாலின பிரிவினையை கடைப்பிடிக்க, பெண்கள் மற்றும் ஆண்கள் வாரத்தின் தனித்தனி நாள்களில் ஜிம்களுக்கும், பூங்காக்களும் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் இந்த உத்தரவுகளைப் பெண்கள் கடைப்பிடிக்காததோடு, மீறியும் உள்ளனர். ஹிஜாப் சரியாக அணியாததோடு, தலையையும் சரியாக அவர்கள் மூடவில்லை.
பெண்கள் ஜிம்கள் மற்றும் பூங்காவிற்குச் செல்ல, இந்த வாரம் முதல் தடை விதிக்கப்படுகிறது. உத்தரவை மீறி பெண்கள் செல்கிறார்களா என்பதை தாலிபான் குழு கண்காணிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.