மதுரை : ஆச்சர்யம்; அற்புதம் நிறைந்த ஏழூர் சப்பரத்திருவிழா!

ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் சிறப்பாக நடைபெற்ற ஏழு ஊர் முத்தாலம்மன் கோயில் சப்பரத் திருவிழா ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

திரண்டு வந்த கூட்டம்

மதுரை மாவட்டத்தில் டி.கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, வி.அம்மாபட்டி, காடனேரி, கிளாங்குளம், வி.சத்திரப்பட்டி ஆகிய ஏழு கிராமங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முத்தாலம்மனுக்கு திருவிழா நடத்துவது வழக்கம்.

இந்தாண்டுக்கான திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று எல்லோரும் எதிர்பார்த்த சப்பரத்திருவிழா கொண்டாடப்பட்டது.

சப்பரம் தூக்கி செல்லும் மக்கள்

இவ்விழாவிற்காக அம்மாபட்டியைத் தவிர மற்ற 6 ஊர்களிலும் மூங்கிலில் சப்பரம் செய்யப்பட்டது. ஒவ்வரு சப்பரமும் 40 அடி உயரத்தில் இருந்தது. செய்யப்பட்ட சப்பரங்களை 6 கிராமத்தினரும் அம்மாபட்டிக்குக் கொண்டு வந்தனர். இங்கு மண்ணால் செய்யப்பட்ட 7 ஊர் அம்மன்களுக்கும் கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு கிராமத்தினரும் அம்மனைப் பெற்று சப்பரத்தில் வைத்து ஊருக்குக் கிளம்பினார்கள்.

மற்ற ஊர்களில் சப்பரங்களைத் தேர்போல் வடம் பிடித்து இழுப்பார்கள். இத்திருவிழாவில் தலையில் தூக்கி வருவார்கள். இதைக்காணப் பல மாவட்ட மக்களும் திரளாக வந்திருந்தனர்.

பக்தர்கள்

பழங்காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்து அதிசயங்கள் நிகழ்த்திய தெய்வ சக்தி பெற்ற சிறுமிகளுக்காக இத்திருவிழா கொண்டாடப்படுவதாகச் சொல்லும் மக்கள்,

அவர்களை தேவன் குறிச்சியில் ஆதிபராசக்தியாகவும் , டி.கல்லுப்பட்டியில் சரஸ்வதியாகவும், வன்னிவேலம்பட்டியில் மகாலட்சுமியாகவும், அம்மா பட்டியில் பைரவியாகவும் காடனேரியில் திரிபுரசுந்தரியாகவும், கிளாங்குளத்தில் சபரியாகவும், சத்திரப்பட்டியில் சௌபாக்கியவதியாகவும் ஏழு கிராம மக்கள் வழிபட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.

சப்பரத் திருவிழா

மாவிளக்கு பூஜை முளைப்பாரி என அம்மனை அனைத்து சமூகத்தினர் ஒன்று கூடி வணங்கி தங்கள் ஒற்றுமையை இத்திருவிழாவின் மூலம் வெளிப்படுத்தினார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.