டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு.. பள்ளிகளுக்கு பறந்தது புது உத்தரவு..!

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மாநில பள்ளிக் கல்வித்துறை புது உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பருவகாலங்களில் கொசுக்களால் பரவக் கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. இதன்படி பிரயாக்ராஜ், கான்பூர் உள்பட பல்வேறு நகரங்களில் பாதிப்பு காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, பிரயாக்ராஜ் நகரில் ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் பலர் டெங்கு பாதிப்புக்கு ஆளான நிலையில், பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நகரின் பல பகுதிகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பிரயாக்ராஜ் தலைமை மருத்துவ அதிகாரி நானக் ஷரண் கூறும்போது, “மாவட்டத்தில் டெங்குவை ஆய்வு செய்வதற்காக, பல பகுதிகளில் பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார். டெங்கு பாதிப்புகளை முன்னிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த சனிக்கிழமை உயர்மட்ட சீராய்வு கூட்டம் நடத்தி, அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு பற்றி மாநில சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சூழலில், லகிம்பூர் கேரி மாவட்டத்தில் டெங்கு பாதித்த 9 நோயாளிகள் மாவட்ட மருத்துவமனையின் டெங்கு வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். கான்பூரில் டெங்கு வார்டில் தினசரி 60 முதல் 70 பேர் காய்ச்சல் பாதிப்புக்காக சேருகின்றனர். அவர்களில் டெங்கு உறுதியானவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரை 6 பெரியவர்கள் மற்றும் 7 குழந்தைகள் என 13 பேர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து உள்ளனர் என டாக்டர் ஷைலேஷ் குமார் சிங் கூறியுள்ளார். தொடர்ந்து, அனைத்து மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களின் விடுமுறைகளை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில பள்ளிக் கல்விதுறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது. அவற்றை பள்ளிகள் நடைமுறைப்படுத்தும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளிக்கு வரும் குழந்தைகள் அனைவரும் கைகள், கால்கள் முழுமையாக மூடியிருக்கும்படி முழுக்கை சட்டைகளையும் மற்றும் முழு கால் சட்டைகளையும் (பேண்ட்) அணிந்து வருவது உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. பள்ளி வளாகங்களில் குப்பைகள் சேராமல் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.