திருச்செங்கோட்டில் தொடர் மழையால் தென்னங்கன்றுகள் சேதம்-இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருச்செங்கோடு : திருச்செங்கோட்டில் பெய்த தொடர் மழையால், தென்னங்கன்றுகள் சேதமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்செங்கோட்டில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், கொல்லப்பட்டி பகுதியில் 95 மில்லி மீட்டராக மழை பதிவாகி உள்ளது. திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழை நீர், வடிகால் வழியாக கொல்லப்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தேங்கி வருகிறது. மழைக்காலங்களில் வடிகால்கள்  வழியாக வெளியேறும் சாக்கடை கழிவுநீரும் கலந்து, விவசாய நிலங்களில் தேங்குவதால் வயல்கள், கிணறுகள் பாழாகி கால்நடைகள் குடிக்க கூட முடியாமல் தண்ணீர் நிறம் மாறிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் வயல்களில், தண்ணீர் தேங்கி புதிதாக நட்ட தென்னங்கன்றுகள் சேதமடைந்துள்ளது. மேலும், கொல்லப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து வயல்களில் தேங்கி உள்ளது என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். எனவே, மழையால் சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், நிரந்தரமாக தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.