உலக மக்கள் தொகை: சீனாவை முந்தும் இந்தியா!

உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ‘உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022’ அறிக்கையின்படி, உலக மக்கள்தொகை எட்டு பில்லியனை கடந்துள்ளது. மக்கள் தொகையில் 2023 ஆம் ஆண்டில் இந்தியா சீனாவை முந்தி அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருக்கும் எனவும் ஐ.நா., சபை கணித்துள்ளது.

மேலும், 2030 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் 8.5 பில்லியனாக அதிகரிக்கக் கூடும் எனவும், 2050ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் 9.7 பில்லியனாக அதிகரிக்கக் கூடும் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரெஸ் கூறுகையில், “இந்த ஆண்டு உலக மக்கள்தொகை தினம் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. உலக மக்கள்தொகை எட்டு பில்லியனை கடந்து, நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், மனித நேயத்தை அங்கீகரிப்பதற்குமான வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு, தாய், சேய் இறப்பு விகிதங்களை வியத்தகு முறையில் குறைத்து, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

அதே சமயம், நமது கிரகமான பூமியை கவனித்துக்கொள்வதற்கான பொறுப்பையும் இது நினைவூட்டுகிறது. ஒருவருக்கொருவர் நமது உறுதிப்பாட்டை நாம் இன்னும் எங்கே இழக்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்கக் கூடிய தருணமாகவும் அமைந்துள்ளது எனவும் ஆண்டோனியோ கட்டரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் விரைவில் டெங்கு தடுப்பூசி!

குறைந்த அளவிலான கருவுறுதல் உள்ளிட்ட காரணங்களால் 2022 – 2050ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 61 நாடுகளின் மக்கள்தொகை ஒரு சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக குறையும் என்றும் உலக மக்கள் தொகை பற்றிய ஐ.நா., அறிக்கை கணித்துள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஐக்கிய குடியரசு ஆகிய எட்டு நாடுகளில் மக்கள் தொகை அதிகரிக்கும் எனவும், 2050 ஆம் ஆண்டு வரை அதிகரிக்கும் உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் இந்த நாடுகளில் மட்டுமே அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 9 ஆண்டுகள் அதிகரித்து 2019 இல் உலகளாவிய சராசரி ஆயுட்காலம் 72.8 ஆண்டுகளை எட்டியுள்ளது. இது மேலும் அதிகரித்து 2050 இல் உலகளாவிய சராசரி ஆயுட்காலம் 77.2 ஆண்டுகளாக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த சராசரி உலக சராசரியை விட 7 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை 1974 இல் 4 பில்லியனை எட்டியது. அடுத்த 48 ஆண்டுகளில் இது இரட்டிப்பாகி தற்போது 8 பில்லியனை எட்டியுள்ளது. ஆனாலும், இதுபோன்ற காலகட்டத்தில் அடுத்த இரட்டிப்பு நடக்க வாய்ப்பில்லை. அடுத்த சில பத்தாண்டுகளுக்கு உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரிக்கும் என்றாலும், குறைவான இறப்புகள் ஆயுட்காலம் அதிகரிப்பதன் காரணமாகவே அது நடக்கும் என்றும் ஐ.நா., மக்கள்தொகை தரவானது சுட்டிக்காட்டுகிறது.

இதன் மூலம் பிறப்பு விகிதங்கள் குறைவதை அறிந்து கொள்ள முடிகிறது. அத்துடன், பிறப்பு விகிதங்கள் குறைந்து கொண்டே வருவதால், இந்த நூற்றாண்டில் மக்கள் தொகை மெதுவாக வளர்ந்து, பின்னர் குறைய தொடங்கும் எனவும் அறிக்கை கூறுகிறது. அதேசமயம், ஆயுட்காலம் அதிகரிப்பதால், முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதையும் ஐ.நா, அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 1974 ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகையின் சராசரி வயது 20.6 ஆண்டுகள், அதாவது உலகின் பாதி பேர் 22.2 வயதுக்கு குறைவானவர்கள்; மற்ற பாதி பேர் அந்த வயதை விட அதிகமான வயதை கொண்டவர்கள். தற்போதைய உலகளாவிய சராசரி வயது 30.5 ஆண்டுகளாக உள்ளது.

உலக மக்கள் தொகை இப்போது 8 பில்லியனாக உள்ளது. 2100ஆம் ஆண்டுக்கு முன்பு இது 10 பில்லியனை தாண்ட வாய்ப்புள்ளது. ஆனால் ஐ.நா.,வின் மக்கள்தொகை கணிப்புத் தரவு மற்றும் பல நிபுணர்கள், உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரிக்காது என்று கருத்தை ஒப்புக் கொள்கின்றனர். இந்த நூற்றாண்டில், மக்கள் தொகை உச்சத்தை அடைந்து அதன் பிறகு குறையத் தொடங்கும் என்றே அவர்கள் கணிக்கின்றனர். மக்கள் தொகையின் உச்சம் படிப்படியாக அதிகரித்து 2086 இல் 10.4 பில்லியனாக இருக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.