கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் எதிரே “நாஞ்சில் நாடு புத்தனாறு” என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றுக்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில், பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளதால், மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால், இந்த ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், இந்த ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சிலர் மீன்வலைகளை தண்ணீரில் போட்டு வைத்துள்ளனர்.
அப்போது, அந்த வலையில் நேற்று எதிர்பாராதவாறு, ராட்சதமலைப்பாம்பு ஒன்று சிக்கி கொண்டது. இதை அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து பயந்து, அலறி அடித்து ஓடினர். இது குறித்து, கொட்டாரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் செல்வன் வனத்துறைக்கு தகவல் அளித்தார்.
அதன் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆற்றில் இறங்கி வலையில் சிக்கிய ராட்சதமலைப்பாம்பை சூசகமாக பிடித்தனர். அந்தப் பாம்பு சுமார் ஐந்து அடி நீளம் கொண்டதாக இருந்தது. அந்த ராட்சதமலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.