அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கும் என மொத்தமுள்ள 182 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிந்தது. குஜராத் முதல்வரும், பாஜவின் முதல்வர் வேட்பாளருமான பூபேந்திர படேல் அகமதாபாத்தின் காட்லோடியா தொகுதியிலும், ஆத் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் ஐசுதன் காட்வி துவாரகா மாவட்டத்தில் உள்ள கம்பாலியா தொகுதியில் போட்டியிடுவதற்கும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
89 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்காக மொத்தம் 1,362 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும். இதேபோல், 93 தொகுதிகளில் இரண்டாவது கட்டமாக நடைபெறும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாளாகும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 21ம் தேதி கடைசி நாளாகும்.