கொரோனா தடுப்பூசி சர்ச்சை: நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

மெல்போர்ன்,

செர்பியா டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் விளையாடுவது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. கடந்த ஆஸ்திரேலிய ஓபனில் அவர் விளையாட அனுமதிக்கப்படவில்லை. ஜோகோவிச் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும், 2023-ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அவர் பங்கேற்க விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு, ஆஸ்திரேலிய அரசு அங்கு வரும் பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கியது. ஆனால், ஜோகோவிச் தடுப்பூசி போட மறுத்துவிட்டார். அதன் பிறகு அவரும் ஆஸ்திரேலியா சென்றடைந்தார். அங்கு அவரது விசா ரத்து செய்யப்பட்டது, இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பினார்.

இதனால் ஜோகோவிச்சால் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட முடியவில்லை. இருப்பினும், இந்த ஆண்டு ஜூலை மாதம், ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற விதியை நீக்கியது. இதனையடுத்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் பங்கேற்க விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற சாதனையை ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் படைத்துள்ளார். 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதே நேரத்தில் ஜோகோவிச் இரண்டாவது இடத்தில் உள்ளார். 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற நோவக் ஜோகோவிச் மீண்டும் இந்த பட்டத்தை வென்றால், நடாலின் சாதனையை சமன் செய்வார்.

ஜோகோவிச் அதிக முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை(9) வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். சமீபத்தில் ஓய்வு பெற்ற ரோஜர் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.