திருப்புவனம் பகுதியில் தொடர் மழை: 50 ஏக்கர் வெற்றிலை கொடிக்கால் நாசம்; நிலக்கடலை செடிகள் அழுகல்

திருப்புவனம் / சிங்கம்புணரி: திருப்புவனம் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் 50 ஏக்கர் வெற்றிலை கொடிக்கால் நாசமடைந்தது. கடலை செடிகள் அழுகி வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் திருப்புவனம் புதூர், நெல்முடிகரை பகுதிகளில் வெற்றிலைக் கொடிகள் அழுகிவிட்டன.

இது குறித்து நெல்முடிகரை கொடிக்கால் விவசாயிகள் சங்க தலைவர் போஸ் கூறுகையில், ‘‘கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கொடிக்கால்களில் தண்ணீர் தேங்கி எந்த வேலையும் செய்யமுடியவில்லை. அகத்தி செடி வளர்ந்து வருகையில் தேங்கிய தண்ணீரால் அழுகிப் போனது. வெற்றிலை கொடிகளும் அழுகி விட்டன. நெல்முடிகரை, புதூர் இரண்டு பகுதியிலும் சுமார் 50 ஏக்கர் கொடிக்கால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வெற்றிலை விவசாயத்திற்கு காப்பீடும் கிடையாது. பாதிப்படைந்த பயிர்களுக்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.

இதேபோல் சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி, முட்டாக்கட்டி, பிரான்மலை, மேலப்பட்டி பகுதிகள், புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டுகுடிபட்டி, வண்ணா இருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளது. ஒரு வாரத்திற்கு மேலாக மழைநீர் தேங்கியதால் கடலை செடிகள் அழுகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.