அய்சால்: மிசோரம் மாநில கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேரை தேடும் பணி நடக்கிறது.மிசோரமின் ஹனதியால் மாவட்டத்தில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இதில், 13 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். பிற்பகல் 3 மணியளவில் குவாரியில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்தன. பணியில் இருந்த தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளில் சிக்கி அலறி கூச்சலிட்டனர். ஆனால் அதிகளவில் பாறைகள் சரிந்து அவர்களை மூடியது. இதில் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர்.
அசாம் ரைபிள் படையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். நேற்று காலை 2 அதிகாரிகள் மற்றும் 13 ஊழியர்கள் என 15 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. நேற்று காலை 7 மணி வரை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்கள். மற்ற 4 பேரை மீட்பதற்கான மீட்புபணி தொடர்கிறது. இவர்கள் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆவர்.