திங்கள்சந்தை: குமரி மாவட்டம் இரணியல் அடுத்த ஆழ்வார்கோயில் தாந்தவிளை பகுதியை சேர்ந்தவர் வியாகப்பன். இவரது மகன் வடிவேல் முருகன் (33). இவருக்கும், இறச்சக்குளம் பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தனது மனைவி ஸ்லோ பாய்சன் கொடுத்து, தன்னை கொல்ல முயன்றதாக வடிவேல் முருகன் புகார் அளித்தார். வடிவேல் முருகன் புகாரின் பேரில் புதுப்பெண் மீது, இரணியல் காவல் நிலையத்தில் வழக்குபதிவும் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே வடிவேல் முருகன் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ மற்றும் மனைவியின் செல்போனில் இருந்த வாட்ஸ் அப் பதிவுகள் உள்ளிட்டவற்றை வெளியிட்டார்.
அதன் மூலம் வேறு ஒரு நபருடன் சேர்ந்து, தன்னை கொல்ல மனைவி திட்டமிட்டது தெரிய வந்தது என்று வடிவேல் முருகன் கூறி உள்ளார். புதுப்பெண் மீது வழக்கு பதிவு செய்துள்ளதால், இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு இரணியல் போலீசார் அவரை அழைத்தனர். அவர் தற்போது இறச்சக்குளம் அருகே உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருக்கிறார். இந்த தகவல் அறிந்ததும், அதிர்ச்சி அடைந்து நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்தார். வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.