பக்ஸார்: கடவுள் ராமரின் இலட்சியங்களும் விழுமியங்களும் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார்.
பிஹாரின் பக்ஸார் மாவட்டம், அஹிரவுலி என்ற கிராமத்தில் இந்து மத துறவிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசியதாவது:
நாட்டின் ஒவ்வொரு துறையும் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே அது உண்மையான வளர்ச்சியாக இருக்கும். ராமரின் முழு வாழ்க்கையும் ஒரு போதனை. அவர் யாரையும் விட்டு விலகுவதில்லை. சமூக ஒழுங்கைப் பேணுவதற்கு ஒரு மனிதன் தனது வரம்புகளை எவ்வாறு அறிந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் உருவகப்படுத்துகிறார். இந்த இலட்சியங்களின் அடிப்படையில், இந்தியா உலகளாவிய குருவாக மாறும். அறிவு மற்றும் புதுமைகளின் மையமாக உருவாகும். 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானதாக இருக்கும். கடவுள் ராமரின் இலட்சியங்களும், விழுமியங்களும் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்” என்றார்.
முன்னதாக ரூ.3,390 கோடி செலவிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் டெல்லி – பிஹார் இடையிலான பயண நேரம் குறையும்.