“மயிலாடுதுறையை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்!" – அண்ணாமலை உறுதி

கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதிகளைப்  பார்வையிட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தண்ணீரில் மூழ்கிய நெற் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

அண்ணாமலை

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று (16.11.2022) பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சீர்காழி அருகேயுள்ள ஆச்சாள்புரம், நல்லூர், பன்னீர்கோட்டகம், வேட்டங்குடி, திருநகிரி, மங்கைமடம், திருவெண்காடு, பூம்புகார், ராதாநல்லுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்கள், வீடுகளை பார்வையிட்டு விவசாயிகள், பாதிக்கப்பட்ட மக்களிடம் பாதிப்புகள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மழையால் சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களிடம், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.க சார்பில்  நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து ராதாநல்லூரில் அண்ணாமலை  செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளை முதல்வர் பார்வையிட்டிருக்கிறார். ஆனால் அவர் எந்த புதிய நிவாரணத்தையும் அறிவிக்கவில்லை. பேரிடர் பாதிப்புகளுக்காக ஏற்கெனவே மத்திய அரசு வழங்கக்கூடிய நிவாரணத் தொகைகளைதான் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மக்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். ரூ.1,000 எந்தவிதத்திலும் போதுமானது இல்லை. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000, பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்க வேண்டும். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணியாற்றவில்லை. வடிகால் வாய்க்கால்களை பராமரிக்கவில்லை. 

அண்ணாமலை

விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை முழுமையான அளவில் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் கிடைக்கவும், விவசாயிகள் பயிர்க்காப்பீடு செலுத்துவதற்கான தேதியை நீட்டிக்கவும், மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்கவும் மத்திய அரசை அணுகி பா.ஜ.க வலியுறுத்தும். பேரிடர் சூழலில் மக்கள் வேலைக்குச் செல்லவில்லை என்றால், 100 நாள் வேலை திட்டத்தில் என்ன சம்பளம் கிடைக்குமோ, அதை பேரிடர் நிதியிலிருந்து அதிகபட்சமாக 30 நாள்களுக்குக் கொடுக்கலாம் என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தியிருக்கிறது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.