வீராங்கனை மரணம்.. விறுவிறுவென இறங்கியது போலீஸ்!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனை பிரியா (17). இவருக்கு மூட்டு வலி காரணமாக பெரியார் நகர் மருத்துவமனையில் கால்முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பின்னர் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்வு இழப்பு ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக உடனே அறுவை சிகிச்சை செய்து வலது கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

வீராங்கனை உயிரிழப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வீராங்கனைக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் காவல் துறைக்கு கிடைக்காததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குநரகம் காவல் துறையிடம் ஒப்படைத்தது. விசாரணை அறிக்கையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளுவார்கள் என, தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.