மதுரை: புத்தகங்களை வாசித்தபடி பயணிக்க வசதியாக நீண்ட தூர ரயிலில் ‘புத்தகங்களுடன் ஒரு பயணம்’ என்ற திட்டத்தை மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. ரயில்களில் நீண்ட தூரம் பயணிப்போர், தங்களின் பயணக் களைப்பை போக்கும் விதமாக புத்தகங்களையும் கையோடு எடுத்துச் செல்வது வழக்கம். இவர்களின் வசதிக்காக அனைத்து பெரிய ரயில் நிலையங்களிலும் புத்தக விற்பனை கடைகள் உள்ளன.
இந்நிலையில், புத்தகப் பிரியர்களுக்கு மேலும் ஒரு வசதியாக மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் ‘புத்தகங்களுடன் ஒரு பயணம்’ என்ற திட்டம் நீண்ட தூர ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி ரயில் பயணிகளுக்கு வார, மாத இதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து பிகானீருக்கு புறப்பட்ட வாராந்திர விரைவு ரயிலில் இத்திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. முதல் கட்டமாக குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டிகளில் பயணிகளுக்கு 3 தமிழ், 2 ஆங்கிலம், 5 பிற மொழி இதழ்கள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தை மதுரை முதுநிலைக் கோட்ட ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மகேஷ் கட்கரி அலுவல் மொழி அதிகாரி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், முந்தைய காலங்களில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் மொபைல் நூலகத் திட்டம் செயல் படுத்தப்பட்டது. காலபோக்கில் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது பரிசோதனை அடிப்படையில் நீண்ட தூர ரயிலில் புத்த கங்களுடன் கூடிய பயணத்துக்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டியிலும் வலை போன்ற பவுச்களில் ஆங்கில, தமிழ் வார, மாத இதழ்கள் வைக்கப்படும். அதை பயணிகள் எடுத்து படித்துவிட்டு, மீண்டும் வைத்துவிட்டுச் செல்ல வேண்டும்.
இத்திட்டத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பிற ரயில்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினர்.மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பிகானீர் ரயிலில் ‘புத்தகத்துடன் ஒரு பயணம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதுநிலைக் கோட்ட ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன்.