மேற்கு வங்க ஆளுநராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவி ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் ஆளுநராக ஜக்தீப் தங்கார் பதவி வகித்து வந்தார்.
அவருக்கும் மம்தா அரசுக்கும் கடும் மோதல் போக்கு நிலவிவந்தது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் துணை குடியரசுத் தலைவராக ஜக்தீப் தங்கார் தேர்வு செய்யப்பட்டார்.
ஜக்தீப் தங்காருக்கு பின் அம்மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த இல.கணேசன் நியமிக்கப்பட்டார். மணிப்பூர் ஆளுநராக இருக்கும் இல.கணேசனுக்கு, மேற்கு வங்க மாநிலம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
இல.கணேசன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்து வந்தார். இந்நிலையில் ஆனந்த போஸ் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியாராக தனது சிவில் சர்வீஸ் பணியை தொடங்கிய போஸ், மாநில அரசின் தலைமை செயலாளர் பதவி வரை பணிபுரிந்தவர். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் நன்மதிப்பை பெற்ற அதிகாரி.
பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் முக்கிய மூளையாக இருந்தவர். இவர் மேற்கு வங்க அரசுடன் இணக்கமான சூழலை கடைப்பிடிக்கிறாரா அல்லது தங்கார் போல் மோதல் போக்கு தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
newstm.in