ஆம் ஆத்மி கட்சியின் விகாஸ் பூரி எம்.எல்.ஏ மகேந்திர யாதவ் தன்னுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களை மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குஜராத் சட்டமன்றத் தேர்தல் மற்றும் டெல்லி எம்.சி.டி தேர்தல் வருவதையொட்டி ஆம் ஆத்மி, பா.ஜ.க இடையே தீவிர போட்டி நிலவுகிறது. அதற்காக, இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் தீவிரமாக தேர்தல் களத்தை பரபரப்பாக்கி வருகின்றனர். 250 வார்டுகளைக் கொண்ட டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் (எம்சிடி) டிசம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் விகாஸ் பூரி எம்.எல்.ஏ தன் கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களை மிரட்டும் வீடியோவை பா.ஜ.க-வின் தஜிந்தர் பால் சிங் பக்கா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் அவர், “ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்காவிட்டால், பாதாளச்சாக்கடையை சுத்தம் செய்ய மாட்டேன்” என்று உள்ளூர் மக்களிடம் கூறுவதைக் கேட்கலாம்.
இந்த வீடியோவை பதிவிட்ட பா.ஜ.க-வின் தஜிந்தர் பால் சிங், “விகாஸ் பூரி எம்.எல்.ஏ மகேந்திர யாதவ், வாக்குகளுக்காக மக்களை மிரட்டுகிறார், இதுதான் கெஜ்ரிவாலின் மாடல்” என்று பதிவிட்டிருக்கிறார்.