தமிழகத்தில் முதன்முறையாக வேலூரில் மனம் திருந்திய பெண் மாவோயிஸ்ட் ஆவின் பாலகம் நடத்த ஏற்பாடு

வேலூர்: மனம் திருந்திய பெண் மாவோயிஸ்ட் வாழ்வாதாரத்திற்காக வேலூரில் ஆவின் பாலகம் திறக்கப்பட்டது. கர்நாடக மாநில மாவோயிஸ்ட் இயக்க மாநிலக்குழு உறுப்பினராக இருந்த பிரபா என்கிற சந்தியா (40) மீது 44 வழக்குகள் உள்ளது. அதே இயக்கத்தில் மத்தியக்குழு உறுப்பினராக இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி இருந்தார். இவர் மீது கர்நாடகாவில் 25 வழக்குகள் உள்ளது. இருவரது தலைக்கும் தலா ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டது. கிருஷ்ணமூர்த்தியை  2021ல் கேரள போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மாவோயிஸ்ட் இயக்க செயல்பாட்டில் இருந்து பிரபா விலகினார்.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். மனம் திருந்தி வாழமுடிவு செய்த அவர், கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி திருப்பத்தூர் எஸ்பி பாலகிருஷ்ணன் முன்னிலையில் சரணடைந்தார். அவர் வேலூர் அரியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கி உள்ளார். அவரின் வாழ்வாதாரத்திற்காக தமிழகத்தில் முதன் முறையாக ஆவின் பாலகம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அரியூர் முதியோர் இல்லம் எதிரே நேற்று ஆவின் பாலகம் திறக்கப்பட்டது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திறந்து வைத்தார். இதில் போலீஸ் எஸ்பிக்கள் ராஜேஷ்கண்ணன் (வேலூர்), தீபாசத்யன் (ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), கண்ணம்மாள் (கியூ பிராஞ்ச்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

6 மாவோயிஸ்டுகள் கண்காணிப்பு: தமிழகத்தை சேர்ந்த 6 பேர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் திருந்தி வாழ ஆசைப்பட்டால், அரசு சார்பில் நிதியுதவி பெற்று தந்து தொழில் அமைத்து தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.