சமீப காலமாக பாஜகவும் திமுகவும் தமிழகத்தில் மொழி அரசியலை கையில் எடுத்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மூலம் மத்திய பாஜக அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்து பல்வேறு போராட்டங்களை திமுக அரங்கேற்றியது. அதற்கு பதிலடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசியல் காரணத்துக்காகவே இந்தி திணிப்பு போராட்டத்தை கையில் எடுக்கிறது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி படிக்க வேண்டும் என கட்டாயமாக உள்ளது. பிள்ளை கிள்ளி விட்டு தொட்டில்லை ஆட்டிவிடும் ஆட்டிவிடும் முயற்சியில் திமுக செயல்படுகிறது என்று திமுகவையும் திமுக தலைவரையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இது ஒரு புறம் இருக்க உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். இந்த விழா அடுத்த ஒரு மாதத்திற்கு காசியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய பாஜக அரசு தமிழுக்கு அளிக்கும் முக்கியத்துவம் குறித்து மக்கள் புரிந்து கொள்வார்கள் என பாஜக நினைக்கிறது.
ஆனால் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாவட்ட பாஜக சார்பில் அண்ணாமலைக்கு வைக்கப்பட்ட வரவேற்பு பேனர் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மதுரை மாவட்டம் வாழைப்பாடி அருகே சாணார்பட்டி கிராமத்திற்கு கடந்த 8ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். அப்பொழுது பாஜக நிர்வாகி ஒருவரின் வீட்டில் அண்ணாமலைக்காக மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அப்பகுதியில் அண்ணாமலையை வரவேற்று பிரம்மாண்டமான பிளக்ஸ் பேனர் பாஜகவினர் வைத்திருந்தனர். அந்த பேனரில் “வருங்கால முதலைமைச்சரே வருக வருக!” என எழுத்துப்பிழைவுடன் அச்சிடப்பட்டிருந்தது. அந்த பேனரை அப்பகுதி சேர்ந்த சிலர் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதன் காரணமாக தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை ஒரு மாதம் நடத்துவதற்கு பதிலாக தமிழக பாஜக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இலவசமாக தமிழ் இலக்கணத்தை கற்றுத் தந்தால் தமிழை பிழையின்றி எழுதவும் படிக்கவும் கற்று கொள்வார்கள் என நெட்டிசன்கள் கலாய்கின்றனர்.