பெங்களூருவில் இருந்து அரசு பேருந்து ஒன்று கடந்த 17-ந் தேதி நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது. வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்ட இந்தப் பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர்.
ஆனால், அந்த பேருந்தில் குடிபோதையில் இருந்த ஒரு வாலிபர் மட்டும் கீழே இறங்காமல் இருந்தார். அவரை அந்த பேருந்து நடத்துனர் பிரகாஷ் கீழே இறங்கும்படி தெரிவித்தார். அதன் பின்னர் அந்த வாலிபர் போதையில் பேருந்து படிக்கட்டில் தள்ளாடியபடி கீழே இறங்கி வந்தார்.
அப்போது நடத்துனர் பிரகாஷ் அந்த வாலிபர் மீது தண்ணீரை ஊற்றி அவரை பேருந்து படிக்கட்டில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் அந்த வாலிபர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த பேருந்து டெப்போவை நோக்கி புறப்பட்டுச் சென்றது. மதுபோதையில் உள்ள பயணியை பேருந்து படிக்கட்டில் இருந்து நடத்துனர் கீழே தள்ளி விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த சம்பவம் குறித்து டெப்போ உதவி பொறியாளர் துரை தெரிவித்ததாவது:- “அவலூர்பேட்டையில் ஏறிய அந்த பயணி பேருந்திலேயே மது அருந்தியும், சிறுநீர் கழித்தும் பிற பயணிகளுக்கு தொந்தரவு அளித்துள்ளார்.
மேலும் அந்த பயணி கீழே தள்ளப்பட்ட விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றுத் தெரிவித்தார். இந்நிலையில் நடத்துனர் பிரகாசை இடைநீக்கம் செய்து விழுப்புரம் கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.