மவுன்ட் மவுன்கனுயு: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சூர்ய குமார் அதிரடியாக விளையாடி சதமடித்தார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2வது டி-20 போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங் செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் சிராஜ் மற்றும் சகால் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இஷான் கிஷன், ரிஷப் பன்ட் துவக்கம் தந்தனர். பன்ட் 6 ரன்னில் வெளியேறினார். ஓரளவு நிலைத்துநின்று ஆடிய இஷான் கிஷன் 36 ரன்னில் கேட்சானார். பின்னர் இறங்கிய சூர்யகுமார் ருத்ரதாண்டவம் ஆடினார். மறுமுனையில் ஸ்ரேயாஷ் (13) ‛ஹிட் விக்கெட்’ முறையில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஹர்த்திக் (13) நிலைக்கவில்லை.
ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும், மறுபக்கம் சூர்யகுமார் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 49 பந்தில் சதம் அடித்து அசத்தினார். கடைசி ஓவரில் நியூசிலாந்து பவுலர் சவுத்தி ‛ஹாட்ரிக் விக்கெட்’ வீழ்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் 51 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 111 ரன்கள் குவித்தார்.
இதன் பிறகு 192 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. துவக்க வீரர் பின் அலென் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். தேவோன் கன்வே 25 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 61 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டானார்கள். இறுதியில் நியூசிலாந்து அணி 18.5 ஓவரில் 126 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனையடுத்து இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தீபக் ஹூடா அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ், சகால் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். சூர்யகுமார் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 3வது போட்டி நாளை மறுநாள் (நவ.,22) நடைபெற உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement