அபுதாபி சால்ட் பே ரெஸ்டாரன்டில் தங்க முலாம் பூசிய இறைச்சி விலை ரூ.1.3 கோடி

அபுதாபி: துருக்கியைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் நுஸ்ரத் கோக்சி. இவர் சால்ட் பே என்று பரவலாக அழைக்கப்படுகிறார். உலகின் முக்கிய நகரங்களில் இவருடைய ரெஸ்டாரன்ட்கள் நுஸ்ரத் என்ற பெயரில் இயங்கி வருகின்றன.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தயாரித்த 24 கேரட் தங்க முலாம் பூசிய இஸ்தான்புல் இறைச்சி புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதன் விலை ரூ.1.3 கோடி. அதில் 14 பேர் கொண்ட குழுவினர் இந்த சால்ட் பே 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை சாப்பிட்டுள்ளனர். அதற்காக 1,40,584 பவுண்டுகளை (ரூ.1.3 கோடி) செலுத்தியுள்ளனர். இதன்படி ஒருவர் சாப்பிட்ட பில்லுக்கு ரூ.9.69 லட்சம் வீதம், 14 பேருக்கும் சேர்த்து ரூ.1.30 கோடி செலுத்தப்பட்டுள்ளது. சால்ட் பே ஓட்டல் வெளியிட்டுள்ள இறைச்சி புகைப்படத்தின் கீழே, “தரம், ஒருபோதும் விலை உயர்ந்த தல்ல” என்று எழுதப்பட்டுள்ளது.

ஓட்டல் உரிமையாளர் சால்ட் பேவை விமர்சித்து சமூக வலைதளங்களில் சிலர் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் ஒருவர், “இது ஆட்டு இறைச்சிதான். இதற்கு ஏன் இவ்வளவு விலை. இதன்மூலம் ஒரு கிராமத்தையே காப்பாற்றலாம்” என்று விமர்சித்துள்ளார். மற்றொருவர் கூறும்போது, “இந்த விலைக்கு இறைச்சி விற்பதன் மூலம் உங்கள் (சால்ட் பே) ஊழியர்களுக்கு விகிதாசாரப்படி ஊதியம் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பரில் லண்டனில் உள்ள சால்ட் பேவுக்குச் சொந்தமான நுஸ்ரத் ஓட்டலில் அதிக அளவு விலைக்கு உணவுகள் விற்கப்பட்டதற்கும் கண்டனக் கணைகள் கிளம்பின என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.