கே.எஸ்.அழகிரி பதவிக்கு சிக்கல்: டெல்லி எடுக்கும் முக்கிய முடிவு!

ஒரு கட்சி என்றால் பல கோஷ்டிகள் இருக்கத் தான் செய்யும். ஒவ்வொரு பகுதியிலும் செல்வாக்கு மிக்கவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் ஆதரவாளர்கள் இருப்பார்கள். யாருக்கு ஆதரவு அதிகம், யாருக்கு முக்கிய பதவி என்ற கேள்வி எழும் போது கோஷ்டி மோதல்கள் உருவாகும். இந்த கட்சிதான் என்றில்லாமல் அனைத்துக் கட்சிகளிலும் காணக் கிடைக்கும் காட்சி தான். ஆனால் கோஷ்டி மோதல் என்றால் காங்கிரஸ் தான் என்ற நிலை உருவாகிவிட்டது.

தமிழகத்தில் மட்டுமல்ல, டெல்லி தலைமையிலும் சரி, பிற மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்தியாவில் மிகப் பழமையான கட்சி காங்கிரஸ் தான். கீழ் இருந்து மேல் வரை ஆட்சி அதிகாரத்தையும் பலமுறை ருசி பார்த்த கட்சி. மூன்று நான்கு தலைமுறைகளாக அந்தக் கட்சியில் பதவியில் இருக்கும் குடும்பங்கள் ஏராளம். அவ்வப்போது புதிய ரத்தமும் பாய்ச்சப்படுகிறது.

பழமை வாய்ந்தது என்றாலே போட்டி அதிகமாக இருக்கும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் கலகக்குரல் வெடித்துக்கொண்டே இருக்கும். தேசிய தலைமை பொறுப்பு சமீபத்தில் தீர்ந்து கார்கே தலைவராக பொறுப்பேற்றார்.

டெல்லிக்கு புதிய தலைவர் கிடைத்துவிட்டார். அதேபோல் மாநிலத்திலும் புதிய தலைமை வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கிவிட்டனர்.

இது தொடா்பாக டில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, செல்வ பெருந்தகை, கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் நேரில் சந்தித்து புகாா் தெரிவித்தனா். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்ததால் திருநாவுக்கரசர் செல்லவில்லை. அதேபோல் சோனியா காந்தியையும் சந்தித்து அழகிரி குறித்து புகார் கடிதம் வாசித்தனர்.

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டியுள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கலகம் வெடித்திருப்பதை டெல்லி தலைமை ரசிக்கவில்லை.

இந்த சூழலில் கே.எஸ்.அழகிரியும் டெல்லிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் குறித்து விளக்கி எழுதியுள்ளார். “திருநெல்வேலி கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், எல்லா நிா்வாகிகளும் தனது ஆதரவாளா்களாகவே இருக்க வேண்டும் என ரூபி மனோகரன் வலியுறுத்தி வருகிறாா். இந்த தோ்தலுக்கும் மாநிலத் தலைவருக்கும் தொடா்பு இல்லை. ஆனால், நெல்லையில் இருந்து 6 பேருந்துகளில் 300 பேரை சத்தியமூா்த்தி பவனுக்கு ரூபி மனோகரனின் ஆதரவாளா்கள் முற்றுகையில் ஈடுபட்டனா். தினேஷ் குண்டுராவையும், என்னையும் வெளியே செல்ல விடாமல் சத்தியமூா்த்திபவன் வாயிலை மூடினா். இதன் காரணமாக தொண்டா்களிடையே மோதல் ஏற்பட்டது ” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விரைவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி குறித்து முக்கிய முடிவொன்றை டெல்லி தலைமை எடுக்க உள்ளதாக சொல்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.