சென்னை: பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த விவகாரம் தமிழக பாஜகவில் பூதாகரமாகியுள்ளது. இந்தச் சம்பவத்தை விசாரித்து 7 நாட்களுக்குள் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்றும் அண்ணாமலை நடவடிக்கை எடுத்துள்ளார்.
அத்துடன், தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாகவும் அண்ணாமலையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக பா.ஜ.க சிறுபான்மை அணி தலைவியிடம் ஓபிசி அணி மாநில நிர்வாகி பேசிய ஆடியோவை கேட்டேன். உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பா.ஜ.க மாநில தலைவரை தொடர்பு கொண்டேன். விசாரணைக்கு உத்தரவிட்ட அறிக்கையை எனக்கு அனுப்பினார். தவறுக்கு நிச்சயம் தண்டனை இருக்க வேண்டும், அதை பா.ஜ.க உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.