தொடரை கைப்பற்றியது இந்திய அணி| Dinamalar

நேப்பியர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ‛டி-20′ போட்டி ‛டக்வொர்த் லூயிஸ்’ முறைப்படி ‛டை’ ஆனதால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 ‛டி-20′ மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதுகிறது. முதல் ‛டி-20′ மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று (நவ.,22) நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் 3வது மற்றும் கடைசி ‛டி-20′ போட்டி நடக்கிறது. ‛டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுத்தீ பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நியூசிலாந்தின் ஆலன், கான்வே ஜோடி துவக்கம் தந்தது. ஆலன் 3 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சாப்மேன் (12) நிலைக்கவில்லை. பொறுப்பாக விளையாடிய கான்வே (59), பிலிப்ஸ் (54) ஆகியோர் அரைசதம் கடந்து அவுட்டாகினர்.

அடுத்ததாக களமிறங்கிய நீசம் (0), சான்ட்னர் (1), மிட்செல் (10), இஸ் சோதி (0), மில்னே (1), டிம் சவுத்தீ (6) வரிசையாக நடையை கட்டினர். 19.4 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், சிராஜ் தலா 4 விக்கெட், ஹர்ஷல் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 161 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரிஷப் பன்ட், இஷான் கிஷன் துவக்கம் தந்தனர். மழை குறுக்கிடும் வாய்ப்பு இருந்ததால் விக்கெட் பற்றி கவலைப்படாமல் இந்திய வீரர்கள் அடித்து ஆட முயற்சி செய்தனர். இதனால் இஷான் கிஷன் (10), ரிஷப் (11), ஸ்ரேயாஸ் (0) விக்கெட்களை 21 ரன்னுக்குள் இழந்து இந்தியா தடுமாறியது.

சூர்யகுமார் தன் பங்கிற்கு 13 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா, சற்று அதிரடியாக விளையாடி ரன்னை உயர்த்தினார். 9 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

latest tamil news

ஹர்த்திக் பாண்ட்யா 30 ரன்னுடனும், தீபக் ஹூடா 9 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் ‛டக்வொர்த் லூயிஸ்’ முறைப்படி 9 ஓவரில் 76 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில் இந்திய அணி 75 ரன்கள் எடுத்திருந்ததால், போட்டி ‛டை’ ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ‛டி-20′ தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றியது. இந்திய வீரர்கள் சிராஜ் ஆட்ட நாயகன் விருதையும், சூர்யகுமார் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.