டெல்லி: போதைக்கு காசு தராததால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் குத்திக் கொன்ற போதை ஆசாமி!

போதை பழக்கத்துக்கு அடிமையான வாலிபன் தனது பெற்றோர், சகோதரி, பாட்டி என ஒட்டுமொத்த குடும்பத்தையும் கத்தியால் குத்திக் கொன்ற கொடூர நிகழ்வு டெல்லியில் அரங்கேறியிருக்கிறது.
தென்மேற்கு டெல்லியின் பாலம் பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபன்தான் கேசவ். குர்கானில் பணியாற்றி வந்த வேலையை விட்ட, இந்த கேசவ் நடந்து முடிந்த தீபாவளியில் இருந்தே வீட்டில்தான் இருந்து வருகிறார்.
குடி மற்றும் போதை வஸ்துக்களுக்கு அடிமையானதால் கேசவனை அவரது குடும்பத்தினர் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள். சிகிச்சை முடிந்து வீடு திரும்பியும் கேசவ் போதை பொருட்களை பயன்படுத்துவது வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
image
இப்படி இருக்கையில், சம்பவம் நடந்த நாளன்றும் போதை பொருள் வாங்குவதற்காக வீட்டில் பணம் கேட்டபோது கொடுக்காததால் தனது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் வெட்டி சாய்த்துவிட்டு தப்ப முயற்சித்திருக்கிறார் கேசவ்.
கேசவின் வீட்டில் இருந்து நேற்றிரவு (நவ.,22) 10.30 மணியளவில் அலறல் சத்தம் கேட்கவே ஓடிவந்து பார்த்த அக்கம்பக்கத்தினர், வீட்டில் உள்ளவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
image
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். அப்போது, வீட்டில் கேசவின் தந்தை தினேஷ் (50), தாய் தர்ஷனா, பாட்டி தீவானா தேவி (75), சகோதரி ஊர்வஷி (18) ஆகிய நால்வரையும் கழுத்தில் கீறியும், கத்தியால் தாறுமாறாக குத்தியதால், ரத்த வெள்ளத்தில் வெவ்வேறு அறைகளில் சடலமாக கிடந்திருக்கிறார்கள்.
இதனிடையே கொலையை செய்துவிட்டு தப்பி ஓட முயற்சித்த கேசவ்வை அக்கம்பக்கத்தினர் மடக்கிப் பிடித்து போலீசிடம் ஒப்படைக்கவே அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.