சென்னை: “அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதி மக்களுக்கு போதுமானது அல்ல. அவர்களுக்கு ரூ.3000-லிருந்து ரூ.5000 வரை கொடுக்க வேண்டும்” என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ஆவின் பால் விலை உயர்வைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசியது: “மயிலாடுதுறையில் நேற்று நான் சென்று பார்த்தபோதுகூட, பயிர்கள் எல்லாம் அழிந்து நாசமாகியிருந்ததை காணமுடிந்தது. மூன்று போகமெல்லாம் மறந்து, ஒரு போகத்துக்கே விவசாயிகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், ஆயிரம் ரூபாயை 10 நாட்களுக்குப் பிறகு, அரசு வழங்கியிருக்கிறது. அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதி மக்களுக்கு போதுமானது அல்ல. அவர்களுக்கு ரூ.3000-லிருந்து ரூ.5000 வரை கொடுத்தால் மட்டுமே விவசாயிகள் பிழைக்க முடியும்.
பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தமிழக அரசு மழையிலிருந்து மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சென்னை முழுவதும் அலங்கோலமாக காட்சியளிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் எல்லாம், எல்லா வாரியமும் தங்களது ஊழியர்களை வைத்து மக்களுக்குச் சேவை சொல்வதாககூறி, எல்லா இடங்களையும் தோண்டிப்போட்டு, அதில் விழுந்து மக்கள் உயிர்போவதை இந்த அரசு பார்த்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமை. திட்டமிடப்படாத முறையற்ற பணிகளே இதற்கு காரணம் என்று நாங்கள் குற்றம்சாட்டுகிறோம். எனவே சென்னை மாநகர மக்களின் நலன் கருதி, ஒரு காலக்கெடுவுக்குள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பணிகளை முறையே, சரியே இந்த அரசு செய்துமுடிக்க வேண்டும். சாதாரண மக்களுக்கான பிரச்சினைகளில் தமாக முன்நிற்கும் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் ஆட்சியாளர்கள் வந்த நூறாவது நாளில், ஆட்சியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய முதல்கட்சி தமாக” என்று அவர் பேசினார்.
முன்னதாக, தமிழக அரசின் பால் உயர்வு உள்ளிட்டவைகளைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.