கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திருப்பத்தூர் மாவட்ட நகர பாஜக துணை தலைவர் கலிகண்ணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமியின் மகன் கலிகண்ணன். இவர் திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வேப்பாலம்பட்டி என்ற இடத்தில் வெங்கடேஸ்வரா கிரஷர் என்ற பெயரில் ஜல்லி உடைக்கும் நிறுவனத்தின் அருகில் இன்று காலை ஆள் நடமாட்டம் இல்லா பகுதியில் கொடூரமான முறையில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் ஊத்தங்கரை கோட்ட உதவி பொறியாளர் அமலா ஹபின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் கலிகண்ணன் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திருப்பத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு செல்லாமல் தலைமறைவாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி கொலை படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்தங்கரை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவர் கலிகண்ணன் அவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியை மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.கலிகண்ணன் அவர்களின் படுகொலைக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையிடம் வலியுறுத்தினேன். திரு கலைக்கண்ணன் அவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும் என்று உத்தரவாதத்தை அளிக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.