நீலகிரி மாவட்டத்தில் ராணுவ வெடி மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காட்டில் ராணுவ வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் உள்ள மருந்து தயாரிக்கும் பகுதி அருகே செட் அமைப்பதற்காக குழாய்கள் எடுத்து செல்லப்பட்டு ஊழியர்கள் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.