கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்ட, ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இணையருக்கு கடந்த நவ. 6ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதனை, அந்த இணையர் அன்றே தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிசெய்தனர்.
ஆலியா பட் – ரன்பீர் கபூர் ஜோடியின் திருமணம், இந்தாண்டு ஏப்.14ஆம் தேதி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆலியா பட் தான் கர்ப்பமடைந்து இருப்பதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது பெண் குழந்தைக்கு அவர்கள் வைத்துள்ள பெயரையும், அதன் பொருள் குறித்தும் ஆலியா பட் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவரின் குழந்தைக்கு ராஹா என பெயரிட்டுள்ளார். இந்த பெயரை அவரின் ரன்பீர் கபூரின் தாயார் நீது கபூர் தேர்வுசெய்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில்,”பல அழகான அர்த்தங்களை தரும் ‘ராஹா’ என்பதுதான் குழந்தையின் பெயர். இதை குழந்தையின் அறிவான மற்றும் அற்புதமான பாட்டியால் தேர்வு செய்யப்பட்டது. ராஹா, அதன் தூய்மையான வடிவத்தில் தெய்வீக பாதை என்று பொருள். சுவாஹிலி மொழியில் அதன் அர்த்தம் மகிழ்ச்சி, சமஸ்கிருதத்தில் ராஹா என்பது ஒரு குலம், பங்களா மொழியில் – ஓய்வு, ஆறுதல், துயர் துடைப்பது. அரபு மொழியில் அமைதி. மேலு்ம, மகிழ்ச்சி, சுதந்திரம் மற்றும் பேரின்பம் என்றும் பொருள்படும்.
இவை அனைத்தும் அவளுக்கு பொருந்தும். இவை அனைத்தையும் அவளை தூக்கிய அந்த கணத்திலேயே நாங்கள் உணர்ந்தோம். நன்றி ராஹா, எங்கள் குடும்பத்தை உயிர்ப்பித்ததற்கு, எங்கள் வாழ்க்கை இப்போதுதான் தொடங்கியது போல் உணர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆலியா பட் விரைவில் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் நடிகை கால் கடோட்டுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இது தவிர, ஆலியாவிற்கு பல படங்கள் வரிசையில் உள்ளன. ஆலியாவிற்கு இந்தாண்டில் மட்டும் 4 படங்கள் வெளியாகின. ஆர்ஆர்ஆர், கங்குபாய், பிரம்மாஸ்த்ரா, டார்லிங்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதில், டார்லிங்ஸ் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியானதை, மேலும் அதில் இணை தயாரிப்பாளராகவும் ஆலியா பட் பங்களித்திருந்தார்.
ரன்பீர் – ஆலியா, சமீபத்தில் வெளியான ‘பிரம்மாஸ்திரா’ திரைப்படத்தில்தான், முதல்முறையாக ஜோடியாக நடித்திருந்தனர். அதற்கு முன்பு, 2016ஆம் ஆண்டு வெளியான ‘ஏ தில் ஹை முஷ்கில்’ ரன்பீருக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா நடித்திருந்தார். அதில், ஆலியா கதாநாயகியாக அல்லாமல் வேறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர், இவர்கள் 2017ஆம் ஆண்டுமுதல் காதலில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.