ஹைதராபாத் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய நடிகர் கமலஹாசன் திடீர் உடல்நல குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 23ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். கமலஹாசனுக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு சாதாரண காய்ச்சலா அல்லது வேறு ஏதேனும் வைரஸ் காய்ச்சலா என்ற அடிப்படையில் சோதனை மற்றும் கொரோனா சோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் நேற்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “லேசான காய்ச்சல், இரும்பல், சளி தொந்தரவு காரணமாக கமலஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர் நன்றாக குணமடைந்து வருவார். இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் காய்ச்சலில் இருந்து குணமடைந்ததால் இன்று காலை வீட்டிற்கு திரும்பி உள்ளார். எனினும் அவர் வீட்டிலேயே ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிய வருகிறது