பகுத்தறிவை பள்ளிப் பருவத்திலேயே ஊட்டும் ‘வானவில் மன்றம்’ – முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை: “பகுத்தறிவைப் பள்ளிப் பருவத்திலேயே ஊட்டி, நம் சிறார்கள் மனதில் ஆராய்ச்சி விதையை ஊன்றும் ‘வானவில் மன்றம்’ அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படை. பகுத்தறிவைப் பள்ளிப் பருவத்திலேயே ஊட்டி, நம் சிறார்கள் மனதில் ஆராய்ச்சி விதையை ஊன்றும் “வானவில் மன்றம்” அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு. கற்றல் இனிமையாகட்டும், கல்வி முழுமையாகட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை, திருச்சியில் அரசுப் பள்ளியில் படிக்கும் 6 முதல் ‌8-ம் வகுப்பு மாணவர்களுக்கான வானவில் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள 13,200 அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 வரையிலான மாணவ மாணவிகள் மொத்தம் 20 லட்சம் பேர் உள்ளனர். இவர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ‌ பாடங்களில் புதிய செயல்முறை விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ‌’வானவில் மன்றம்’ என்ற புதிய திட்டத்தை தொடங்க தமிழக அரசு ‌முடிவு செய்தது.

அதன்படி திருச்சி மாவட்டம், காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் மற்றும் நடமாடும் அறிவியல் ஆய்வகங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்‌ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.