ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா, கடந்த ஆண்டு அக்டோபரில் ‘ஒய்எஸ்ஆர் தெலங்கானா’ என்ற கட்சியை தொடங்கினார். இதையடுத்து அவர் தெலங்கானாவில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
பாத யாத்திரையின்போது, ஆளும் கட்சியான டிஆர்எஸ் மீது கடுமையாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் ஷர்மிளா. இந்நிலையில், வாரங்கலில் நேற்று முன்தினம் இரவு, ஷர்மிளா பயன்படுத்தும் கேரவான் பேருந்து மீது சிலர் தாக்குதல் நடத்தி, அதற்கு தீ வைத்தனர். அப்போது ஷர்மிளா பேருந்தில் இல்லை. இந்த சம்பவத்தால் இரு கட்சித் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. “பாத யாத்திரையை நிறுத்தவே பேருந்தை முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தீயிட்டு கொளுத்தி பயமுறுத்துகிறார். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன் எனது பாத யாத்திரை தொடரும்” என ஷர்மிளா கூறினார்.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்காக வாரங்கல் மாவட்டம், சின்னராவ் பேட்டா என்ற இடத்தில் ஷர்மிளாவை கைது செய்துள்ளதாக தெலங்கானா போலீஸார் நேற்று தெரிவித்தனர்.