கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடிந்து விழுந்த வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட மூதாட்டியை மீட்கும் பணியில் தீயணைப்பு, காவல், வருவாய்துறையினர் போராடிய நிலையில் 4 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார். மீட்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கடை வீதியைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி (74). கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் 70 ஆண்டுகள் பழமையான முதல் தளத்துடன் கூடிய மாடி வீட்டில் தனியாக வசித்து வந்தார். 3 மகன்கள், 3 மகள்கள் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பழமையான கட்டிடம் என்பதால் இடித்து விடலாம் என பாத்திமா பீவியின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.
தான் இருக்கும்வரை இக்கட்டிடத்தை இடிக்கக்கூடாது என பாத்திமா பீவி கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து அங்கேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று (நவ. 29) காலை 7 மணி சுமாருக்கு பாத்திமா பீவி குப்பை வண்டி வந்தப்போது குப்பைகளை கொட்டிவிட்டு, பால் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளார். சுமார் 7.20 மணிக்கு அப்போது வீட்டின் முதல் தளக்கூரை இடித்து விழுந்து, தரைத்தள கூரையுடன்சேர்ந்து இடிந்து விழுந்ததில் கட்டிட இடிப்பாடுகளுக்குள் பாத்திமா பீவி சிக்கிக்கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி மற்றும் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை வீரர்கள் 25க்கும் மேற்பட்டோர் 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிப்பாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் வருவாய் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில் இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் காலை சுமார் 10.30 மணிக்கு சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினார்.
சம்பவ இடத்தில் வட்டாட்சியர் செந்தில், டிஎஸ்பி முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்நிலையில் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூதாட்டி காலை 11.50 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டார். அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு மேலும் இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.