மகனுடன் சேர்ந்து கணவரை 10 துண்டாக வெட்டிய பெண் :புதுடில்லியை அதிர வைத்த மற்றொரு படு பயங்கர கொலை சம்பவம்| Dinamalar

புதுடில்லி :புதுடில்லியில், மகனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, உடலை 10 துண்டுகளாக வெட்டி ‘பிரிஜ்’ஜில் வைத்து, பின் அவற்றை இரவு நேரங்களில் குப்பை தொட்டிகளில் வீசியெறிந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
புதுடில்லியில் காதலியை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி, அவற்றை புதுடில்லியின் பல பகுதிகளில் வீசியெறிந்த அப்தாப் அமீன் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் அடங்குவதற்கு முன், அதேபோன்ற மற்றொரு சம்பவம் புதுடில்லியில் மீண்டும் நடந்துள்ளது. கிழக்கு டில்லியின் பாண்டவ் நகர் பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் சில மாதங்களுக்கு முன், அழுகிய நிலையில் ஒரு ஆணின் கால் கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரித்தனர். எந்த தகவலும் கிடைக்கவில்லை.சில நாட்களுக்குப் பின், அங்கிருந்து சிறிது தொலைவில் ராம்லீலா மைதானம் அருகே உள்ள குப்பையில், கால், கை போன்ற சில பாகங்கள் மிகவும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
திடுக்கிடும் தகவல்இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், நள்ளிரவு நேரத்தில் ஒரு இளைஞனும், ஒரு பெண்ணும் பையுடன் அங்கு வருவதும், குப்பை தொட்டியில் அந்த பையை வீசிச் செல்வதும் பதிவாகிஇருந்தது.
மற்றொரு இடத்தில் இருந்த கேமராவிலும், அதே பெண்ணும், இளைஞனும் இதேபோல் ஒரு பையை வீசி எறிந்து செல்லும் காட்சி பதிவாகிஇருந்தது. இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், இந்த பெண்ணையும், இளைஞனையும் கண்டறிந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பூனம்,48. அவரது மகன் பெயர் தீபக்,25. பூனத்தின் முதல் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து, 2017ல் அஞ்சன் தாஸ், 45, என்பவரை, பூனம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பூனத்துக்கும், அவரது முதல் கணவருக்கும் பிறந்தவர் தீபக்.அஞ்சன் தாசும் ஏற்கனவே திருமணம் ஆனவர் தான். இவரது முதல் மனைவியும், குழந்தைகளும் பீஹாரில் வசிப்பதாக கூறப்படுகிறது. அஞ்சன் தாஸ், பூனம், தீபக், இவரது மனைவி மற்றும் தீபக்கின் சகோதரி ஆகிய ஐவரும் புதுடில்லி பாண்டவ் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து
வந்தனர். இந்நிலையில், அஞ்சன் தாஸ், பூனத்தின் முதல் கணவரின் மகள் மற்றும் தீபக்கின் மனைவி ஆகியோரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிப்பதாக பூனம் சந்தேகப்பட்டார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்தது. குப்பை தொட்டி
இந்நிலையில், கடந்த மே மாதம் இரவு வீட்டுக்கு வந்த அஞ்சன் தாசுக்கு, பாலில் துாக்க மாத்திரை கொடுத்து துாங்க வைத்த பூனம், தன் மகனுடன் சேர்ந்து, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.பின், கணவரின் உடலை 10 துண்டுகளாக வெட்டி, பிரிஜில் வைத்தார். இதன்பின் ஒவ்வொரு நாளும், உடலின் ஒவ்வொரு பாகத்தையும் பெரிய பையில் வைத்து, மகனுடன் சேர்ந்து, இரவு நேரத்தில் நகரின் பல
பகுதிகளில் உள்ள குப்பை தொட்டிகளில் வீசி எறிந்துள்ளார். ரத்தக்கறையை மறைப்பதற்காக வீட்டில் புதிதாக பெயின்ட் அடித்த பூனம், கணவர் எங்கே என கேட்டவர்களுக்கு, சொந்த ஊருக்கு வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளதாக கூறி
ஏமாற்றியுள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, தாயும், மகனும் வசமாக சிக்கியுள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.