சென்னை: “ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம்” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் கொண்டு வந்து உடனடியாக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றினோம். அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்தத் தவறும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினோம். ஆளுநர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம்.
இந்தியாவுக்கே முன்மாதிரி சட்டத்தை இயற்றியுள்ளோம். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை மட்டுமின்றி ஒழுங்கு முறைகளையும் கொண்டு வரவுள்ளோம். அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததற்கான காரணத்தை ஆளுநரிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.