இன்று ஜெயலலிதா 6-ம் ஆண்டு நினைவு தினம்: தனித்தனியே வந்து அஞ்சலி செலுத்தும் இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன், சசிகலா

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனியே அமைதி பேரணியாக வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது 6-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதிமுக தற்போது பழனிசாமி, பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் 3 அணியாக செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் தனித்தனியே அமைதி பேரணியாக வந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் அமைதி ஊர்வலமாக சென்று,ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று காலை 10 மணிக்கு அஞ்சலிசெலுத்த திட்டமிட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் காலை 10.30 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இவர்களை தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 11 மணிக்கும், சசிகலா 11.30 மணிக்கும் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

நிர்வாகிகளுக்கு உத்தரவு

பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் இந்த நினைவு தின பேரணியில் தங்கள் பலத்தை காட்டும் விதமாக, அவரவர் தரப்பில் அதிக அளவில் தொண்டர்களை அழைத்து வருமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இது மட்டுமின்றி, தமிழகம் முழுவதிலும் இருந்து ஜெயலலிதா அபிமானிகள், நிர்வாகிகள், கட்சியினர் என ஏராளமானோர் சென்னைக்கு வந்து மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதனால், பேரணி செல்லும் பகுதியில் தேவையற்ற பிரச்சினைகள், மோதல்கள் ஏற்படுவதை தடுக்க, மாநகர காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். வாலாஜா சாலை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அதிக அளவில் போலீஸாரை நிறுத்தி, நெரிசல் ஏற்படாமல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மலர்களால் அலங்கரிப்பு

நினைவு தினத்தையொட்டி, ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்டம், நகரம், பேரூராட்சி, வட்டம்,கிளை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் தங்கள்பகுதிகளில் ஜெயலலிதா படத்தை வைத்து மாலை அணிவித்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்துமாறு பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.